சினிமாவில் நடிக்காவிட்டால் செத்துவிடுவேன்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

மத்திய அமைச்சராக இருக்கும் பிரபல நடிகர் சினிமாவில் நடிக்காவிட்டால் நான் செத்து விடுவேன் என்று சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் இருந்து வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி தான் என்பதும் அதனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மத்திய அமைச்சர் பதவியை ஏற்ற மறுநாள் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ’சினிமா என்பது என்னுடைய பேஷன், சினிமா இல்லை என்றால் நான் இறந்து விடுவேன், 22 படங்களை முடிக்க வேண்டியுள்ளது என்று அமித்ஷாவுடன் கூறிய போது அந்த பேப்பரை அவர் தூக்கி வீசினார். திருச்சூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றேன்.

சினிமாவில் நான் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பொறுப்பை விட்டு உடனே விலகவும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நான் அமைச்சராக நடிக்கும் போது படப்பிடிப்பின் போது என்னுடன் நான்கு அதிகாரிகள் இருக்க வேண்டும், அந்த செலவை தயாரிப்பாளர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பேசி உள்ளார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.