கபாலி-கபிலன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் அனைத்து டெக்னீஷியன்களும் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்த படத்திற்கு பாடல்கள் எழுதும் பொறுப்பை கவிஞர் கபிலன் அவர்களிடம் இயக்குனர் பா.ரஞ்சித் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவிஞர் கபிலன் சமீபத்தில் 'கபாலி' படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாகவும், அப்போது அவர் ரஜினியை சந்தித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கவிஞர் கபிலன் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தில் இடம்பெற்ற 'அண்ணனோட பாட்டு' என்ற பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி சந்திப்பு குறித்து கபிலன் கூறியபோது, 'இந்த சந்திப்பில் தான் எழுதிய சந்திரமுகி' படத்தின் பாடலை ஞாபகம் வைத்து ரஜினிகாந்த் குறிப்பிட்டதாகவும், அவருடன் 'கபாலி' படத்தின் பாடல்கள் குறித்து ஆலோசனை செய்ததாகவும், அதன் பின்னர் தன்னுடைய குடும்பம், மற்றும் மகன் குறித்து அவர் அக்கறையுடன் விசாரித்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய மகனின் பெயர் பெளத்தன் என்று கூறியதும், பெளத்தம் குறித்து அவர் கூறிய தகவல்களும், சித்தர் பாடல்கள் மற்றும் மகாபாரதம் குறித்து அவர் கூறிய கருத்துக்களை கேட்டு வியந்து போனதாக கபிலன் கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை அவருடன் மதிய உணவிற்கு அழைத்து சென்று எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை கேட்டு கேட்டு சாப்பிட கொடுத்ததாகவும், ரஜினியை சந்தித்த அந்த நாளை தன்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும் கபிலன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.