சுந்தர் பிச்சையின் ஸ்ரீதேவி குறித்த டுவீட்டால் ஆவேசமாகிய தமிழர்கள்

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர்பிச்சை ஒரு தமிழர் என்பதும் அதிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்காரர் என்பதும் தெரிந்ததே. தமிழர்கள் எந்த நாட்டிற்கு சென்று எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தாய்மொழியை மறக்க மாட்டார்கள் என்பதுதான் அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்து சுந்தர் பிச்சை பதிவு செய்துள்ள ஒரு டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சற்றுமுன்னர் கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீதேவி மரணம் குறித்து குறிப்பிடுகையில்,''ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது. அவர் நமக்கெல்லாம் முன்னோடி. பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது சோக இழப்பால் நாங்கள் வருந்துகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவீட்டில்தான் நமது சமூக வலைத்தள பயனாளிகள் ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அதாவது சத்மா திரைப்படம் தமிழில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' படத்தின் ரீமேக். சத்மா 1983ஆம் ஆண்டில்தான் இந்தியில் வெளிவந்தது. எனவே 1972ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர்பிச்சை தனது பத்தாவது வயதில் தமிழ்ப்படமான 'மூன்றாம் பிறை' படத்தை பார்த்திருக்கத்தான் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் தனது டுவீட்டில் 'சத்மா' படத்தை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சுந்தர் பிச்சையின் இந்த டுவீட் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பகிருங்கள்