சரீரத்தை விட்டவர் சாரீரமாக உலவுகிறார்: எஸ்பிபி குறித்து கமல்ஹாசன்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கடந்த ஆண்டு இதே நாளில் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி அவர்கள், அதன் பின்னர் கொரோனாவில் இருந்து குணமாகிய போதிலும், இணை நோய்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இழப்பு இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்த நிலையில் அவர் காலமாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இதனை அடுத்து திரையுலகினர் பலர் எஸ்பிபி அவர்களுக்கு தங்களது ஒருவருட அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எஸ்பிபி உடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்த உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் சரீரமாக நம்மிடையே இருந்த எஸ்பிபி அவர்கள் தற்போது சாரீரமாக உலாவி வருகிறார் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:

ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என்று கூறியுள்ளார்.