ரஜினி ஆரம்பித்து வைத்த செளந்தர்யா நிறுவனம் மூடப்பட்டதா?  என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,July 10 2024]

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்த சமூக வலைதள செயலி ஒன்றை ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்த நிலையில் அந்த நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் சிறப்பாக இயங்கி வரும் நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ’ஹூட்’ என்ற செயலியை ஆரம்பித்தார்.

இந்த செயலி குரல் வழியாக செய்திகளை பரிமாறிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த செயலி 15 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 60 வினாடிக்குள் தங்கள் கருத்துக்களை குரல் வழியாக வெளியிடலாம் என்றும் முதல் குரலாக ரஜினிகாந்த் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏஆர் ரகுமான் உட்பட பல பிரபலங்கள் இதில் இணைந்திருந்த நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த செயலியில் பயனர்கள் ஆக்டிவாக இருந்தனர். இந்த நிலையில் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியின் டவுன்லோட் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த செயலி மூடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.

ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக கூ என்ற செயலி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த செயலி சமீபத்தில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.