பிரபல நடிகையின் தாத்தா காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மகாராஷ்டிரா மாநில கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கர்நாடகா காங்கிரஸில் சமீபகாலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் அவர் கடந்த சில மாதங்களாக கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டுமின்றி தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெற எஸ்.எம். கிருஷ்ணா முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தம்மை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணா பிரபல தமிழ், கன்னட நடிகை 'குத்து' ரம்யாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.