தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவி செய்யும் வகையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நம்மை எல்லாம் அச்சுறுத்தி இருப்பது மட்டுமின்றி அதிக உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இதை தடுப்பதற்காக நம்முடைய தமிழக அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நமக்கு நிறைய விதிமுறைகளையும் கூறி வருகிறார்கள். அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இந்த வீடியோ

அதில் மிக முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டேன். வீட்டை விட்டு மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படி வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். இது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான். இருப்பினும் இவை எல்லாம் கடைபிடிப்பது தான் நமக்காக கொரோனா எதிராக பாடுபட்டுக் கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்

நாம் எல்லோரும் நிச்சயமாக கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும். ஒன்றிணைவோம், கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் நாட்டையும் காப்போம். கொரோனா நோய் வெல்வோம். மக்களை காப்பாற்றுவோம். இவ்வாறு சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்