சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Sunday,October 15 2017]

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் அஜித், விஜய்யை அடுத்து மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை கொடுத்து வருகின்றன. இருப்பினும் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாக ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது. ஒருவருடம் ஆகியும் இன்னும் அவருடைய அடுத்த படம் வெளிவரவில்லை. வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் அதிக இடைவெளி விடுவது நல்லதல்ல என்பதே அவருடைய ரசிகர்களின் வேண்டுகோளாக  உள்ளது.

விஜய்சேதுபதி போல் வருடத்திற்கு ஆறு படங்கள் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் வருடத்திற்கு  இரண்டு படங்களிலாவது சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் கண்டிப்பாக நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.