சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியா? மீண்டும் இணையும் சக்சஸ் கூட்டணி..!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் மீண்டும் அவருடன் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

'டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த நிலையில் இந்த புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி 'டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த எஸ்ஜே சூர்யாவும் இந்த படத்தில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 'டான்’ திரைப்படத்தில் இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்படுவதால் நாயகி தவிர 'டான்’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ படத்தை முடித்தவுடன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.