போதைப்பொருள் வழக்கில் தெலுங்கு பட நடிகை ஒருவர் கைது!!!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

 

தெலுங்கு சினிமாவில் 2 ஆவது ஹீரோயினாகப் பல படங்களில் நடித்து வரும் ஸ்வேதா குமாரி என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கன்னட மொழியில் வெளியான “ரிங் மாஸ்டர்” என்ற படத்தின் நாயகியாக நடித்த இவர் பல தெலுங்கு படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு பின்பு இந்திய திரையுலகில் போதைப்பொருள் விவகாரத் தலைத்தூக்கத் தொடங்கி விட்டது. அதையடுத்து இதுதொடர்பாக பல பாலிவுட் பிரபலங்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. அந்த விசாரணையின்போது சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்தி நடிகர் ராம்பாலின் காதலியான கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸ் என்பவரும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதேபோல பிரபல பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான பிரோஸ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மாரிஜுவானா எனும் போதைப்பொருள் பிடிப்பட்டதால் அவரது மனைவி ஷபானா சயீத் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கன்னட மொழி சினிமாவிலும் போதைப்பொருள் விவகாரம் கொடிக்கட்டி பறக்கத் தொடங்கியது. இதில் கன்னட நடிகையான ராகிணி திரிவேதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி, சஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதேபோல கேரள மாநிலத்திலும் போதைப்பொருள் விவகாரத்தில் பிரிஸ்டி பிஸ்வாஸ் என்ற நடிகை கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மும்பையின் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் தெலுங்கு பட நடிகையான 27 வயது நடிகை ஸ்வேதா குமாரி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் தென்னிந்திய திரைப்பட நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.