ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு அரிசி: பிரபல கிரிக்கெட் வீரர் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நேற்று முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

பெரும் பணக்காரர்களுக்கு 21 நாட்கள் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு 21 நாட்கள் என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை விட பட்டினியால் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கும்

இந்த நிலையில் எந்த ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு கைகொடுக்கும் மனிதத்தன்மை இந்தியாவில் எப்போதும் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போதும் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு கை கொடுக்க பலர் முன் வந்துள்ளனர்

அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் பின் தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏழைகளின் மனதில் பாலை வார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சவுரவ் கங்குலியை போல மற்ற கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் திரையுலகினரும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்த உதவியை ஏழை எளிய மக்களுக்கு இந்த நேரத்தில் செய்து மனிதத்தன்மையை காக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்