ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? சரத்குமார் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் சரத்குமார் மீது சமூக வலைத்தள பயனாளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை , மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைதான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன்.
பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிக்கை சகோதரர்கள் " ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்"

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தழிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.