மனைவி ராதிகாவுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை பாஜகவுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைத்தார். அதன் பிறகு அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்தது.

விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட நிலையில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. மேலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் போட்டியிட்டதால் மும்முனை போட்டி சூடு பிடித்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். அதன் பின் அவர் கோவிலில் நடந்த விசேஷ பூஜையில் தனது மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்ட நிலையில் அவரது வேண்டுதல் பலிக்குமா? என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.