எங்கள் அணி வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. சரத்குமார் நம்பிக்கை

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளும் விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 1 முதல் 3 வரை நடைபெறவுள்ளது.

நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் சரத்குமார் அவர்கள் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து விஷால் அணியின் சார்பில் நாசர் போட்டியிடவுள்ளார். அதேபோல் செயலாளர் பதவிக்கு ராதாரவியும், விஷாலும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் பத்து நாட்களில் அறிவிக்கவுள்ளதாக சரத்குமார் பேட்டியளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது, "நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுகிறேன். எங்கள் அணி வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. வெற்றி பெற போகும் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. நாங்கள் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. நடிகர் சங்க தேர்தலை இனி யாராலும் நிறுத்த முடியாது.

நான் பதவியில் இருந்த காலத்தில் நடிகர், நடிகைகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளேன். இப்பொழுதும் தொடர்ந்து பிரச்சனைகளை தீர்த்து வருகிறேன். என் மனசாட்சிப்படி நடிகர் சங்க தலைவராக இருந்தவரையில் சிறப்பாக செய்துள்ளேன்.

எங்கள் அணியின் சார்பில் யார் யார் போட்டியிட உள்ளார்கள் என்பதை இன்னும் பத்து நாட்களில் அறிவிப்பேன்' என சரத்குமார் கூறியுள்ளார்.