காட்டன் புடவை கட்டி அசல் பெண் போலவே இருக்கும்… AI- செயற்கை செய்தி வாசிப்பாளர்கள்?

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

AI- தொழில்நுட்பத்தால் உண்டான செயற்கை நுண்ணறிவு குறித்த செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்த்து வருகிறோம். அதாவது கணினியால் கட்டுப்படுத்தப்படும் மென்பொருள் நுண்ணறிவுடன் தொடர்புடையது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களைப் போலவே கணினி அல்லது ரோபோக்களை சிந்திக்கவும் செயல்படவும் வைக்க முடியும்.

இது எதிர்காலத்தில் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் அதே வேளையில் இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக மனிதர்களின் வேலை வாய்ப்புகளுக்கு பெரிய ஆபத்து ஏற்படுமோ? என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.

காரணம் மனித உழைப்பே இல்லாமல் ஒரு கணினியின் மென்பொருளை கட்டுப்படுத்தி சமூகத்திற்குத் தேவையான வேலைகளை எளிதாக செய்து கொள்ள முடியும். அந்த வகையில் உலகம் முழுவதும் பல்வேறு புதிய புதிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபாதியாக இந்தியாவில் சனா, லிசா எனும் இரு செயற்கை மென்பொருள் செய்தி வாசிப்பாளர்கள் நேற்று புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளனர். இந்த செயற்கை மென்பொருள் செய்தி வாசிப்பாளர்கள் பார்ப்பதற்கு உண்மையான பெண்களைப் போலவே படு மார்டன் மற்றும் காட்டன் புடவையை அணிந்துகொண்டு செய்திகளை சரியான உச்சரிப்புடன் வாசிக்கின்றனர். மேலும் மனிதர்களின் முகபாவங்களை இவர்களும் அழகாக செய்கின்றனர்.

அதிலும் சனா எனும் செய்தி வாசிப்பாளர் நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளையும் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வேலையையும் மிக எளிதாக செய்து முடிக்கிறார். இதனால் செய்தி ஊடகங்களுக்கு பெரிய அளவிற்கு வேலைப்பளு குறையும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகமான ‘ஆஜ் தக்‘ எனும் செய்தி நிறுவனம் தற்போது சனா எனும் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுக்கப்படுத்தி இருக்கிறது. இந்த சனா நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நேர்காணல் நடத்தி அவரிடம் 2024 இல் எனக்கு இதேபோல நேர்காணல் அளிப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெறுமனே செய்திகளை மட்டுமே வாசிக்கும் வகையிலான ஏஐ தொழில்நுட்பங்கள் இதற்கு முன்பு கொண்டுவரப்பட்டு இருந்தன. ஆனால் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சனா நேர்காணல் செய்கிறது. கூடவே மனிதர்களை போலவே சிந்தித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறது. மனிதர்களைப் போலவே முகபாவனை மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. இத்தனை அம்சங்களும் மென்பொருள் கட்டுப்பாட்டினால் இயக்கப்படுகின்றன.

சனாவைத் தவிர ஒடிசா மாநிலத்தில் தனியார் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளர் லிசாவை நேற்று அறிமுகம் செய்திருக்கிறது. இந்த லிசா பல மொழிகளில் செய்திகளை படிக்கும் திறன் கொண்ட வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் லிசா தற்போது ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்கிறார். கூடவே ஒடியா மொழியை பேசுகிறார்.

நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லிசா குறித்துப் பேசிய தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் லிசாவிற்கு இன்னும் தெளிவாக ஒடியா பேசும் ஆற்றல் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் லிசாவை ஒரு உண்மையான பெண்ணைப் போலவே கருதலாம். அவருக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் கணக்குகள் இருக்கின்றன. அவரை பின்தொடரவும் அவரிடம் கேள்விகைள எழுப்பவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி சனா, லிசா எனும் இரு செயற்கை செய்தி வாசிப்பாளர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் தகவல் இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2018 இல் சீனா கணினி வரைகலையை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஆண் செய்தி வாசிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது. அதேபோல ரஷ்யாவின் ஸ்வோய் டிவி நிறுவனம் வானிலை அறிக்கையை வாசிக்கும் வகையில் செயற்கை மென்பொருளை உருவாக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.