பத்திரிகையாளர்களுக்கு சமுத்திரக்கனி எழுதிய நன்றிக் கடிதம்

  • IndiaGlitz, [Monday,March 28 2016]

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் சமுத்திரக்கனி பத்திரிகையாளர்களுக்கு ஒரு நன்றிக்கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பத்திரிகையாளர் நண்பர்களுக்கு வணக்கம்,

எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.


63வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்திற்கு கிடைத்துள்ளது.

எனக்கு இவ்விருது கிடைக்க உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், விசாரணை படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுக்குழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன்

விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு விசாரணை படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. விசாரணை படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். மேலும் தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது அடுத்த படைப்பான 'அப்பா' விரைவில் வெளிவரவுள்ளது. உங்கள் மேலான ஆதரவை எனக்கும், சிறந்த தமிழ் படைப்புகளுக்கும் தொடர்ந்து அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு சமுத்திரக்கனி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.