'சமுத்திரக்கனி'யின் 'அப்பா' திரைமுன்னோட்டம்

  • IndiaGlitz, [Wednesday,June 29 2016]

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் வரும் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படமும் 'சாட்டை' படம் போலவே வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தில் நடித்த சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை சமுத்திரக்கனியே தயாரித்து இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் ஆசிரியரின் பெருமைகளை கூறிய நிலையில் இந்த படத்தில் அப்பாவின் அருமை பெருமைகளை விளக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு பின்னர் ஒவ்வொரு மனிதருக்கும் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை ஏற்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு மிக அருமையாக பின்னணி இசை அமைத்துள்ளதாகவும், அவருடைய இசையும் பாடல்களும் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
மூன்று அப்பாக்கள் தனது குழந்தைகளை நடத்தும் விதம் குறித்துதான் இந்த படம் விளக்குவதாகவும், முதல் அப்பாவான சமுத்திரக்கனி தனது மகனுக்கு உரிய சுதந்திரம் கொடுத்து அவனுக்கு நல்வழியை காட்டுவதாகவும், இரண்டாவது அப்பா தம்பி ராமையா தன் மகனிடம் மிக கடுமையாக நடந்து கொள்வதாகவும், மூன்றாவது அப்பா தனது மகனிடம் பொறுப்பாகவும் இல்லாமல் கடுமையாகவும் இல்லாமல் இருப்பதாகவும் கதை அமைந்துள்ளதாகவும் இவர்களில் எந்த அப்பாவின் மகன் வெற்றி பெறுகிறார் என்பதே கதை என்றும் கூறப்படுகிறது.
அப்பாவின் அருமைகளை கூறும் இந்த படம் எந்த அளவுக்கு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது என்பதை வரும் வெள்ளியன்று இந்த படத்தின் திரை விமர்சனத்தில் பார்ப்போம்