ஜுப்லி ஹில்ஸ் பகுதியை காலி செய்கிறாரா? நடிகை சமந்தா வாங்கிய புது வீடு குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

நடிகர் நாகசைதன்யாவுடனான மணமுறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா முன்பு குடியிருந்த ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸ்ஸிலேயே வசித்துவந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் புதிய வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா தற்போது ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்தத் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக நடிகர் நாகசைதன்யாவை விட்டு பிரிந்த நிலையில் நடிகை சமந்தா முன்பு தாங்கள் வசித்துவந்த ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸ்ஸிலேயே இப்போதும் வசித்துவருகிறார். ரூ.100 கோடி மதிப்புக்கொண்டதாகக் கூறப்படும் இந்த வீட்டை நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் சேர்ந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதிலும் நடிகை சமந்தா அதிக அளவில் பணம்செலவிட்டதாகவும் கூறப்பட்டது.

விவாகரத்திற்குப் பிறகு நடிகை சமந்தா ஜுப்லி ஹில்ஸ் வீட்டிலேயே வசித்துவருகிறார். நடிகை சமந்தாவிடம் இந்த வீடு ஒப்படைக்கப்பட்டது குறித்த முழுமையான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மும்பையில் ரூ.15 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாகவும் தகவல் வெளியானது.

அதேபோல விவாகரத்திற்குப் பிறகு நடிகர் நாகசைதன்யா தனது பெற்றோர் வசித்துவரும் அதே ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான தகவலுக்கு இடையே தற்போது நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13 ஆவது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் வசித்துவரும் நடிகை சமந்தா திடீரென்று வெறொரு பகுதியில் புதிய வீட்டை வாங்கியிருப்பது குறித்து ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.