வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துக் கொள்ளை!!!

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

 

வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருநாவுக்கரசு (43) என்பவரும் அவரது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் 2 உறவினர்கள் என அனைவரும் தீபாவளி அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கதவை சாத்தாமல் அனைவரும் தூங்கி இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அனைவரது முகத்திலும் மயக்க ஸ்பிரேவை அடித்து இருக்கின்றனர். அனைவரும் மயக்கமான பின்பு அந்த வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த பணப் பெட்டி, நகைப்பெட்டி என அனைத்தையும் தூக்கிக்கொண்டு அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருக்கின்றனர்.

அந்த மொட்டை மாடியில் வைத்து பணம் மற்றும் நகையை மட்டும் வைத்துக்கொண்டு அந்த பெட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். காலை எப்போதும் போல தூங்கி எழுந்த திருநாவுக்கரசு பீரோ திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து பதறி இருக்கிறார். அதோடு மொட்டை மாடிக்குச் சென்ற போது பணப்பை பெட்டி எல்லாம் கிடந்து இருக்கிறது. இதையடுத்து வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.