குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தானா? நடிகர் ராமராஜன் ஆதங்கம்..!

  • IndiaGlitz, [Saturday,June 22 2024]

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கமல்ஹாசன், விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் ராமராஜன் சினிமா தொடங்குவதற்கு முன்பு குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடானது என்பது டைட்டில் மட்டும் தானா? என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:

50 மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. அத்தனை பங்கெடுக்கும். இங்கு 50 வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பவர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால்.

கொரோனா கொத்து கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச்சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோர கொடூர முகம் காட்டி செல்கிறது.

மனிதர்களை குடி எப்படி கொல்கிறது என்பது நிகழ்கால பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது என்ற குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ள வைக்க போகிறோம்?

ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இறந்தவர்கள் அதிகம்.