2 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினிகாந்த்.. அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களில் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக விரைவில் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதற்கான பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தார். அவரது காட்சியின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வந்த நிலையில் படக்குழுவினர் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட பட படிப்பு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்ட ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில வாரங்களில் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.