ரஜினியின் கபாலிக்கு கிடைத்த பச்சைக்கொடி

  • IndiaGlitz, [Sunday,October 25 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் படக்குழுவினர் மலேசிய செல்லவுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கபாலி' படக்குழுவினர் மலேசியாவில் உள்ள State of Melaka என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்தவும், சிப்பாங் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்திற்கு சொந்தமான இடத்திலும் படப்பிடிப்பு நடத்தவும் மலேசிய சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

தற்போது மலேசிய அதிகாரிகள் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். இந்த அனுமதி கடிதங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த பகுதிகளில் வரும் நவம்பர் 4ஆம் தேதி படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மலேசிய அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த பச்சைக்கொடி காட்டியுள்ளதால் 'கபாலி' படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் மலேசியாவுக்கு கிளம்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலேசியாவின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் படக்குழுவினர் ஹாங்காங் மற்றும் தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் மீண்டும் சில நாட்கள் சென்னை படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் அத்துடன் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, 'மெட்ராஸ்' கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம், வரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.