ரசிகர்களின் அதிரடி முடிவு: ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு வேறு வழியில்லாமல் அவரது முடிவை ரசிகர்கள் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரு சிலர் ரஜினியின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி ரஜினி ரசிகர்கள் சிலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்காததை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் ரஜினி மக்கள் மன்றத்தினர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது

ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் ஜனவரி 10ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தைச் சேர்ந்த, மாவட்ட பகுதி, வட்ட, பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது. மீறி கலந்து கொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்