விஷால் அணியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ராதிகா சரத்குமார்

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி என கூறப்படும் விஷால் அணியினர்களும் சரத்குமார் தலைமையிலான அணியினர்களும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் விஷால் அணியினர் தங்கள் மீது கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ராதிகா கூறியபோது, ''தற்போதைய நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முறைகேடு செய்துள்ளனர் என எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி விஷால் அணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிரணியினர் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஆவேசமாக கூறினார். மேலும் சமீபத்தில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் சிவகுமார் அவர்களே நாங்கள்தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்' என ராதிகா கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சரத்குமார், "விஷால் அணியினர் நாங்கள் முறைகேடு செய்ததாக மட்டுமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அனைத்து இடங்களிலும் கூறி வருகின்றனர். இதே நடிகர் சங்கத்தில் அவர்கள் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த ஆதாரங்களை வெளியே கூறினால் அவர்களுக்குத்தான் அசிங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.