பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த முதல்வர்: மாணவர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்த முதல்வர் ரங்கசாமி, அதன்பின் ஜூலை 16 முதல் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் நலனை கருதி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் பள்ளிக்கு மீண்டும் செல்ல உள்ளதை அறிந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் பள்ளிகள் திறக்கப்படும் அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்திலும் மிக விரைவில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆசிரியர்கள் சங்கம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.