பிரபல மக்கள் தொடர்பாளரின் தாயார் கொரோனாவுக்கு பலி: உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

தமிழ் திரையுலகின் பிரபல மக்கள் தொடர்பாளர் ஒருவரின் தாயார் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவர் உருக்கமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலியாகி வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் தமிழ் திரையுலகின் பிரபல மக்கள் தொடர்பாளராக இருந்து வருபவர் ரியாஸ் அகமது. இவரது தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

82 வயதான அவர் மருத்துவமனையில் இருந்து விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிகிச்சை பலனின்றி ரியாஸ் அகமது அவர்களது தாயார் பலியாகிவிட்டார். இதனை அடுத்து ரியாஸ் அகமது தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவு செய்திருப்பதாவது:

என்ன ஹாஸ்பிடல்லே இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போ, நான் ரூம்ல தனியா இருந்து என்ன பாத்துகிரேன்னு சொன்னீங்க. நீங்க சீக்கரமா குணமாயிடுங்க கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். என்மேல கோவிச்சுகிட்டு வீட்டுக்கு வராமே கடவுள் கிட்டிய போயிடீங்களா அம்மா. என்ன மன்னிசிடுங்க! என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் அகமதுவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.