கருத்துக் கணிப்பு என்பவை பொய்ப் பிரச்சாரங்களே… தொண்டகளுக்கு கடிதம் எழுதிய இ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு பெயரில் நடைபெறும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் அதிமுக தொண்டர்களுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தேர்தல் களத்தில் கண்ட தொடர் வெற்றியை போல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெற்றிடும் வகையில் உழைத்திடும் அதமுக தொண்டர்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் இருவரும் மேற்கொள்ள பிரச்சாரங்களின் போது உற்சாகத்துடன் தொண்டர்கள் பணியாற்றுவதை பார்த்து ஆனந்தம் அடைகிறோம். பிரச்சாரங்களின் போது “தொண்டர்களின் உழைப்பையும் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களின் வாஞ்சை மிகு வரவேற்பையும் கண்டு மகிழ ஜெயலலிதா நம்மிடையே இல்லாமல் போய்விட்டாரே” என்ற ஏக்கம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு நாள் தாங்குமா, ஒரு வாரம் ஓடுமா, இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று கூறியவர்களின் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளோம். தற்போது தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம் என்று அந்த மடலில் தெரிவித்து உள்ளனர்.

அதிமுக அரசின் சாதனைகளை கண்டு வியக்காதவர்கள் இல்லை. புயல்கள், பெருமழை, வெள்ளப்பெருக்கு, பருவம் தவறிப் பெய்த பேய் மழை, கடுமையான வறட்சி, கொரோனா பெருந்தொற்று ஆகிய அனைத்து பேரிடர்களையும் வெற்றிகரமாக சமாளித்து நிவாரணப் பணிகளை திறம்பட மேற்கொண்டதாகவும் தொண்டர்களுக்கு எழுதிய மடலில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்து உள்ளனர்.

தமிழக மக்கள் அதிமுகவிற்கு 2016 ஆம் ஆண்டு கொடுத்த தொடர் வெற்றியை போல் தற்போதும் வழங்க காத்திருக்கிறார்கள் என்பது பிரச்சாரங்களில் சந்திக்கும் மக்கள் கூட்டமும் அதன் எழுச்சியும் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் வரும் தகவல்கள் அதமுக மீது மக்கள் பேரன்பு கொண்டு இருப்பதையும் அந்த பேரன்பு வாக்குகளாக அதிமுகவிற்கு வந்து சேரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக எழுதியுள்ள கடித்தத்தில் தெரிவித்து உள்ளனர்.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் என்ற பெயரில் கருத்து திணிப்புகளை கையில் எடுத்துள்ளன. கடந்த கால கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாகப் போயின என்பதை எல்லோருக்கும் தெரியும் என்றும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் கூட கருத்துக் கணிப்புகள் மக்களின் தீர்ப்புகளின் முன் தோற்று போயுள்ளன என்றும் தொண்டர்களுக்கு எழுதிய மடலில் தெரிவித்து உள்ளனர்.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மளை பொய் பிரச்சாரங்களும் கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும் என்றும் தேர்தல் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்கள் கூட்டணி கட்சியினருடன் இணைந்து முழு மூச்சுடன் பணியாற்றி தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் என்று தொண்டர்களும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.