சூர்யாவுக்கு பீட்டா அனுப்பிய மன்னிப்பு + அறிவுரை கடிதம்.

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

நடிகர் சூர்யா, தனது 'சி3' படத்தின் புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தை பயன்படுத்துகிறார் என்று பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியதற்கு கடந்த வாரம் சூர்யா, வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பீட்டா இந்தியா அமைப்பின் சி.இ.ஓ பூர்வா ஜோஷிபுரா தற்போது மன்னிப்பு கடிதம் ஒன்றை சூர்யாவுக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும் அந்த மன்னிப்பு கடிதத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரால் காளை கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தனது நிலையை மாற்றிக்கொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் காயம், மரணம் ஆகியவை ஏற்படுவதாகவும், சமீபத்தில் கூட திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒரு இளைஞர் இறந்துவிட்டதாகவும், அகரம் பவுண்டேசன் நடத்தி வரும் தாங்கள் இதுபோன்ற விளையாட்டினை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும், அந்த மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.