வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் மீன் வாங்க குவிந்த கூட்டம்: கொரோனாவுக்குத்தான் கொண்டாட்டம்!

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரசால் பலியாவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த நிலையிலும் இன்னும் அதன் சீரியசை புரிந்து கொள்ளாமல் பொதுமக்கள் பொறுப்பின்றி நடந்து கொள்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் கடந்த வாரம் சனிக்கிழமை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அதிலும் பலர் மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்கியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது

இதனை அடுத்து தமிழக அரசு சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் மீன் மார்க்கெட் உள்பட இறைச்சி கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் வெள்ளிக்கிழமை அன்று மீன் உள்பட இறைச்சிகளை வாங்க மாட்டார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் அதையும் மீறி இன்று வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டத்தைப் பார்க்கும்போது இன்னும் நம் மக்கள் திருந்தவில்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆகமொத்தம் கொரோனாவுக்கு சரியான கொண்டாட்டம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.