விஜய்க்கு பா ரஞ்சித் சொன்ன சூப்பர் ஹிரோ கதையில் பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Saturday,September 04 2021]

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்யை சந்தித்து பல பிரபல இயக்குநர்கள் கதை கூறி வருகின்றனர் என்பதும், அவரது அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் விரைவில் முடிவாகும் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் ஒரு சூப்பர் ஹீரோ கதையை விஜய்யிடம் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த கதை விஜய்க்கு பிடித்ததா? விஜய்-பா ரஞ்சித் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது

இந்த நிலையில் தற்போது விஜய்க்கு சொன்ன சூப்பர் ஹீரோ கதைக்கு வேறு ஹீரோவை பா ரஞ்சித் தேர்வு செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்தான் சியான் விக்ரம். இது மற்ற படங்களில் வரும் சூப்பர் ஹீரோ போன்று கதை இல்லை என்றும் இது ஒரு வித்தியாசமான இதுவரை சொல்லப்படாத சூப்பர் ஹீரோ கதை என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் அந்த கதையில் தற்போது விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். அதேபோல் விக்ரம் தற்போது ’துருவ நட்சத்திரம்’, ‘கோப்ரா’, ‘மஹான்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்துமே இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதால் விரைவில் அவர் பா ரஞ்சித்தின் சூப்பர் ஹீரோ கதையில் இணைவார் என்று எதிர்பார்க்கபடுகிறது