'என்னை காலி பண்ண நினைத்தார்கள்: 'கபாலி' ரஞ்சித்

  • IndiaGlitz, [Tuesday,August 16 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் 25 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் 'கபாலி' படம் குறித்தும், இந்த படத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள், நன்மைகள் குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
'கபாலி' படம் ஏன் எடுத்தேன் என்றும், இந்த படத்தின் நோக்கம் என்ன என்றும் எனக்கு தெரியும். எனது நோக்கம் சரியாக போய் சேர்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இந்தப் படம் வெளியாகும் முதல் நாளே, இந்த படத்தை காலி பண்ண சிலர் முயற்சிப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதை என் உதவியாளர்களிடம் ஏற்கனவே கூறியிருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் சிலர் இந்த படத்தை எதிர்த்தார்கள்.
ஆனால் மக்களிடம் அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. மக்கள் கொண்டாடவில்லை என்றால் இப்படம் 25ம் நாள் வரை தமிழகத்தில் நிறைய திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓட வாய்ப்பில்லை.. இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடைய வேண்டும் என ஏன் நினைத்தேன் என்றால் அப்போது தான் முற்போக்கு கருத்துக்கள் சார்ந்த சினிமாக்கள் நிறைய வரும். தோல்வியடைந்தால் அதைப் பற்றி அதற்குப் பிறகு பேசவே முடியாது.
'அட்டகத்தி' படம் வெற்றியடையவில்லை என்றால் நான் எனது கருத்துக்களை ஒரமாக வைத்துவிட்டு, ஜெயிப்பதற்காக வேறு ஏதாவது சினிமா இயக்கியிருப்பேன். 'அட்டகத்தி' ஜெயித்ததால் 'மெட்ராஸ்' படமும், மெட்ராஸ் ஜெயித்ததால் 'கபாலி'யும் எடுத்தேன். தற்போது 'கபாலி' ஜெயித்திருப்பதால் இதேபோன்று வேறு சில படங்கள் எடுக்கப் போகிறேன்.
'கபாலி'யில் பிரச்சினை இருக்கிறது என்பதும் அது என்ன பிரச்சினை என்பதும் எனக்கு தெரியும். அதையும் மீறி தான் இப்படத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று யோசித்தோம். எனக்கு ரஜினி என்கிற சூப்பர் ஸ்டார் பிம்பம் அவசியம் தேவையாக இருந்தது. நான் யார் மூலமாக என் குரலை பேச வேண்டும் என்று நினைத்தேனோ, அந்த குரல் மூலமாக தான் பேசியிருக்கிறேன். அந்த குரலின் சத்தம், விரீயம் அனைவருடைய காதையும் கிழித்திருக்கிறது என்று நம்புகிறேன். அடுத்ததாக அந்த குரல் அனைவருடைய வீடுகளிலும் தொலைக்காட்சியில் பேசும். இப்படம் மூலமாக பல விவாதங்கள் நடைபெற்ற சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது.