ஸ்டார் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை செய்து வரும் நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் நீண்ட கால கனவான நடிகர் சங்கத்திற்கு என சொந்தக்கட்டிடம் கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் முதல்கட்டமாக அனைத்து நடிகர்களும் இணைந்து கலந்து கொள்ளும் 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த போட்டிக்கு திடீரென ஒரு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பு இன்று சென்னை காவல்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நாட்களில் ஒன்றான ஏப்ரல் 17-ல் இந்த போட்டி நடைபெறுவதாகவும், இந்த போட்டிக்கு அனைத்து கட்சி தொண்டர்களும் வருவார்கள் என்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் இதனை தவிர்க்கும் பொருட்டு இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த மனுமீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்பதை அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.