2ஆம் பாகம் வெளியாகும் முன்பே 3ஆம் பாகம்.. ரூ.400 கோடி வசூல் செய்த படத்தின் குழு தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2024]

’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு பிரபல நடிகரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மூன்றாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் வெறும் 20 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்த படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ’காந்தாரா’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக இருப்பதாகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ’காந்தாரா’ படத்தில் இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் முந்தைய பாகமாக இருக்கும் என்றும் அதேபோல் மூன்றாம் பாகம் என்பது முதல் பாகத்தின் அடுத்த பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகம் போலவே ரிஷப் ஷெட்டி இந்த இரண்டு பாகங்களில் நடித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.