close
Choose your channels

இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று உதயநிதியிடம் கூறினேன்: பிரியதர்ஷன்

Monday, December 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்பட பலர் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள படம் 'நிமிர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு

தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா: இதுவரை நான் 4 படங்கள் தயாரித்திருக்கிறேன். எல்லாமே  மலையாள படங்கள். முதன் முறையாக தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். அதுவும் 93 படங்கள் இயக்கிய லெஜண்ட் பிரியதர்ஷன் சார் இயக்கும் படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் இயக்கிய  பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். நிமிர் படமும் சிறப்பாக வந்திருக்கிறது 

பார்வதி நாயர்: என்னுடைய கேரியரில் 'நிமிர்' மிக முக்கியமான படம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். என்னை விட அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், நடிகர்களுடன் வேலை செய்தது என் பாக்கியம்

இயக்குனர் மகேந்திரன்: ஒரு நாள் பிரியதர்ஷன் சார் என்னை அழைத்து, அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சொன்னார். இதுவரை அவர் நான் நடித்த எந்த படமும் பார்த்ததில்லை. அதுவும் எனக்கு நல்லது தான். நாம் பெரிய நடிகர்களோடு நடிக்கும் போது அவர்களையே வியந்து பார்த்துக் கொண்டிருப்போம், அந்த மாதிரி இந்த படத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் சாரை வியந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். தெறி படத்துக்கு பிறகு நிறைய வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனக்கு வந்தன, அவற்றை ஒத்துக் கொள்ளவில்லை, பிரியதர்ஷன் சாருக்காக இந்த படத்தை ஒப்புக் கொண்டேன்

உதயநிதி ஸ்டாலின்: மகேந்திரன் சார் அவர்களுடன் இந்த படத்தில் நான் நடித்தது என் அதிர்ஷ்டம். பிரிவியூவில் படத்தை பார்த்த என் மனைவி, உன் கேரியரில் மனிதன் படத்துக்கு பிறகு அதை விட ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறாய், ஆனாலும் ஃபகத் பாசில் செய்ததில் பாதியை செய்திருக்கிறாய் என சொன்னார். அவர் கொடுத்த இந்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தை பார்த்த பலரும் பிரியதர்ஷன் சாரின் சிறந்த படமாக நிமிர் வந்திருக்கிறது என்றார்கள். ஜனவரி 26 ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம்

இயக்குனர் பிரியதர்ஷன்: கடந்த சில வருடங்களாக நான் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் நீண்ட இடைவெளி விட காரணம் இதுவரை ஒரு நல்ல பெயரை பெற்றிருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது. 100 படங்களை தொட, இன்னும் 8 படங்கள் தான் இருக்கு. அதனால் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். நாம் எடுக்கும் படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் படம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. தேசிய இயக்குனராக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். 

இந்த கதைக்கு சாதாரண ஒரு முகம்  தேவைப்பட்டது. உதயநிதி நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. அவரின் சாதாரண பையன் போன்ற தோற்றத்தை வைத்து தான் அவரை தேர்வு செய்தேன். படத்தில் நடிக்க வேண்டாம், கேரக்டராக நடந்து கொள் என உதயநிதியிடம் சொன்னேன். அவர் கேரக்டராகவே மாறி விட்டார். படத்தில் உதயநிதி கதாபாத்திரத்தின் பெயர் நேஷனல் செல்வம். போட்டோகிராபராக, யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வாழும் அந்த கிராமத்து இளைஞன், அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் வரை, செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்து பழி வாங்குவது தான் படம். ஒரிஜினல் படத்தின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, திரைக்கதையை மாற்றி இதில் கொஞ்சம் கமெர்சியலாக பண்ணியிருக்கிறோம். சமுத்திரகனி, எம்எஸ் பாஸ்கர் ரொம்பவே உதவியாக இருந்தார்கள். முழுக்க தென்காசி பின்னணியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளைஞனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும்படி படமாக்கியிருக்கிறோம். கிராமத்தையும், கிராமத்து வாழ்க்கையும் அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். 36 நாட்களில் படத்தை முடித்தோம். அதில் 28 நாட்கள் செருப்பே அணியாமல் நடித்தார் உதயநிதி. மகேந்திரன் சார் டப்பிங் முடித்த பிறகு, ஃபகத் பாசிலை விட உதயநிதி சிறப்பாக செய்திருக்கிறார் என சொன்னார். முள்ளும் மலரும், உதிரி பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே படங்கள் வெளியான காலத்தில் மகேந்திரன் சாரிடம் உதவியாளராக வேலை செய்ய முயற்சி செய்தேன், அது நடக்கவில்லை. இப்போது அவருடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். 

வைரமுத்து, தாமரை பாடல்கள் எழுதிருக்காங்க, ஆனால் இரண்டு இளைஞர்கள் அஜனீஷ், டர்புகா சிவா தான் இசையமைச்சிருக்காங்க. இளைஞர்களிடம் வேலை செய்யும்போது, நிறைய கேட்டு வாங்க முடியும், நமக்கு தேவையானவற்றை உபயோகித்து கொள்ளலாம். இந்த படத்தில் நிறைய இளைஞர்களோடு வேலை பார்த்தது புது அனுபவமாக இருந்தது. கடந்த 20 வருஷமா தமிழில் கலை படங்களாக எடுக்குறீங்க, கமெர்சியல் படம் ஏன் எடுக்கறதில்லனு கேட்குறாங்க. கடைசியாக இயக்கிய காஞ்சிவரம், சில சமயங்களில் கலை படங்கள். அந்த குறைய தீர்க்க  அமைந்தது தான் நிமிர். ஒளிப்பதிவாளர் வின்செண்ட், இயக்குனர் பாரதிராஜா ஆகியோருக்கு இந்த படத்தை  அர்ப்பணிக்கிறேன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment