ஜோதிகா படத்தை முதல் காட்சி பார்க்கவிருக்கும் கல்லூரி மாணவிகள்

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'துமாரி சூளு' என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரி மாணவிகள் முடிவு செய்திருப்பாதாகவும், இதற்கான ஏற்பாடுகளை அந்த கல்லூரி நிர்வாகமே செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இந்த கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான திருமதி. வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது: நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது உள்ள ஸ்மார்ட்போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது. இந்த சூழலில் ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது . 36 வயதினிலே, மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் , எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது.

மகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட எங்களது கல்லூரியிலுள்ள அனைத்து மாணவிகளும் கண்டுகளித்தோம். அவர்கள் படம் பார்த்துவிட்டு,மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம் . மகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது. அதே போல் “ காற்றின் மொழியும் “ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் மொழி எங்களுக்கு பிடித்த படம். என்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால்,சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும், கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினர்.