எரியுற தீயில எண்ணெய் ஊற்றும் நேபாளம்: இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம்!!!

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப் பகுதியில் பிரச்சனை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே நேபாளம் எல்லை வரையறைக் குறித்து இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிவந்தது. எல்லைப் பகுதியில் இந்தியா உருவாக்கி இருக்கும் புதிய சாலை கட்டமைப்பு நேபாளத்தின் எல்லைப் பகுதியைத் தொடுவதாகவும் குற்றம் சாட்டத் தொடங்கியது. இதனால் நேபாள இராணுவத்திற்கும் இந்தியா இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கும் வார்த்தை போர் கூட வெடித்தது. இந்நிலையில் நேபாளம் குறிப்பிட்டு காட்டிய எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இத்தருணத்தில் நேபாள அரசாங்கம் செய்திருக்கும் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம் இந்திய அரசையே கடும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இந்தியாவிற்கு சொந்தமான லிபுலேக் கலபணி, லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து நேபாள நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த 3 பகுதிகளும் இந்திய வரைபடத்தில் இருக்கும் இடங்களாகும். இந்திய வரைபடத்தில் இருக்கும் பகுதிகளை நேபாள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகபோக வாக்கெடுப்பில் இணைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்திரகாண்ட் பகுதியில் இருக்கும் தர்சுலே என்ற இடத்தில் இருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் படி இந்திய இராணுவம் ஒரு புதிய சாலை அமைப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சாலையை கடந்த மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். புதிய சாலை அமைப்பு நேபாளப் பகுதியை எளிதாக இணைக்கிறது. இது எல்லைப் பகுதியில் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது என நேபளாம் குற்றம் கூறத் தொடங்கியிருக்கிறது. இந்த சாலை அமைப்பை நீக்கா விட்டால் இருநாட்டு உறவுக்குள்ளும் சிக்கல் நேர வாய்ப்பிருப்பதாகக் கணிப்புகள் கூறப்பட்ட நிலையில் நேபளாம் அரசாங்கம் ஒருபடி மேலே போய் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை உருவாக்கி கெத்துக் காட்டியிருக்கிறது. புதிய சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சைக் கொடி காட்டியிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்திய எல்லைப் பகுதியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கு பல குழப்பங்கள் நீடித்து இருக்கும் இந்நேரத்தில் இன்னொரு பக்கம் நேபாளம் தனது நடவடிக்கையால் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் நேபாளமும் சீனாவும் நட்பு நாடாகச் செயல்படுகின்றன. இதுஒருவேளை சீனாவிற்கு ஆதரவாக நேபாளத்தின் ராஜதந்திரமாகக் கூட இருக்கலாம் அல்லது குழப்ப நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விளையாடிப் பார்க்கலாம் என்ற நோக்கத்தில் நடைபெற்று இருக்கலாம் எனவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்தியாவின் எல்லைக் கோட்டுப் பகுதிகள் நேபாளம், சீனா, திபெத், பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு பகிர்ந்து கொண்டு வருகிறது என்றாலும் இதுவரை முறையான வரையறை எதுவும் இல்லாததே அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என இன்னொரு பக்கம் காட்டமான விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.