ஷாருக்கான் மகனுக்கு பெயில் கிடைக்காதது ஏன்? மாஃபியா கும்பலுடன் தொடர்பா?

மும்பை அருகே சொகுசு கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்டியில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கலந்துகொண்ட நிலையில் மும்பை போலீஸ் அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தது. இந்நிலையில் ஆர்யன்கானின் தரப்பில் இருந்து ஜாமீன் மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டதோடு வரும் 7 ஆம் தேதிவரை NCP காவல் நீடிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் ஆர்யன் கானின் செல்போனை அவர்கள் சோதனையிட்டதாகவும் அந்தப் போனில் ரகசிய வார்த்தைகளுடன் உரையாடல்கள் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். இதனால் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருப்பதாகம் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

இதையடுத்து ஆர்யன்கான் சார்பாக போடப்பட்டு இருந்த ஜாமீன் மனு ரத்துச் செய்யப்பட்டு வரும் 7 ஆம் தேதி வரை NCP காவல் நீடிக்கப்பட்டு உள்ளது. மேலும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்பாக சொகுசு கப்பலின் உரிமையாளருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதோடு சொகுசு கப்பலுக்கு போதைப் பொருள் எப்படி வந்தது? போதைப்பொருளை சப்ளை செய்தது யார்? ஆர்யன் கானின் செல்போனில் இருக்கும் உரையாடல்கள் சர்வதேச கும்பலுடன் நடத்தப்பட்ட உரையாடலா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

போதைப்பொருள் வழக்கில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் மகன் சிக்கியிருப்பது மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் போதைப்பொருள் விசாரணையில் NCP அதிகாரிகள் படுதீவிரம் காட்டி வருவதும் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.