நயன்தாராவுடன் இணைந்த மணிரத்னம் நாயகி

  • IndiaGlitz, [Saturday,December 12 2015]

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் இன்னொரு நாயகி கேரக்டருக்கு கடந்த சில வாரங்களாக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கேரக்டருக்கு நித்யாமேனன், காஜல் அகர்வால், பிந்துமாதவி ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது நித்யாமேனன் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நித்யாமேனன் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' என்ற வெற்றி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்க நித்யாமேனன் ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரமே தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனேகமாக இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபுதமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'மர்ம மனிதன்' அல்லது 'மாரீசன்' என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.