திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை நவ்யா நாயர்… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,May 29 2023]

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை நவ்யா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் 2001 இல் ‘இஷ்டம்’ எனும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இதையடுத்து 2004 இல் வெளியான ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நடிகர் பிரச்சன்னாவுடன் இணைந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகாமானார். அந்த வகையில் ‘பாசக்கிளிகள்‘, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி‘, ‘மாயக்கண்ணாடி‘, ‘அமிர்தம்‘, ‘சில நேரங்களில்‘, ‘ஆடும் கூத்து‘, ‘ரசிக்கும் சீமானே‘, ‘ராம் தேடிய சீதை‘ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2010 இல் சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நடிகை நவ்யா நாயர் திருமணத்திற்குப் பிறகு ஒருசில திரைப்படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார். இதனால் மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுக்க நினைத்த அவர் ‘ஜானகி ஜானே’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மே 12 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை நவ்யா நாயர் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஜானகி ஜானே’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக அவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் அப்போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் அவர் சிரித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று ஆறுதல் கூறிவருகின்றனர்.