சென்னை போலீஸ் கமிஷனரிடம் நாசர் அளித்த புதிய மனு

  • IndiaGlitz, [Thursday,March 17 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டியை நடத்த சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டதாக வந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த போட்டி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டிக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "நடிகர் சங்க நலனுக்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்' என்று கூறினார்.

மேலும் இந்த போட்டிகள் ஆறு ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்றும் மொத்தம் எட்டு நட்சத்திர அணிகளில் சுமார் 50 நடிகர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.