சென்னை காவல்துறை ஆணையரிடம் நாசர் அளித்த புகாரின் முழுவிபரம்

  • IndiaGlitz, [Monday,August 29 2016]

நடிகர் சங்கம் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் புகார் கூறி வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளதாக நடிகர் சங்கத்தின் அறிக்கை ஒன்று கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் காவல்துறை ஆணையாளரிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்த புகார் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த புகாரில் உள்ளவற்றை பார்ப்போம்
அன்புடையீர் வணக்கம்
27.08.2016 காலை 11.30 மணியளவில் சங்க உறுப்பினர் திரு.வாராகி அவர்கள் சில சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார். சங்க செயற்குழு உறுப்பினரும், டிரஸ்டியுமான திரு.பூச்சிமுருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் திரு.பிரேம்குமார் அவர்கள், திரு.ஸ்ரீமன் அவர்கள், திரு.உதயா அவர்கள் மற்றும் சங்க சட்ட ஆலோசகர் திரு.கிருஷ்ணா ரவீந்திரன் அவர்கள், திரு வாராகி அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ள காத்து கொண்டிருந்தனர். ஆனால், திரு.வாராகி அவர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி சென்றுவிட்டார்.
ஆனால், சங்கத்தின் நுழைவாயில் எதிரே அனைத்து முன்னேற்பாட்டோடு ஊடகங்களை வரவழைத்து பேட்டி கொடுத்து குழப்பம் விளைவித்து கொண்டிருக்கும்போதே, திரு.சங்கையா (தற்காலிக ARO பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்) அவர்கள் ஒரு கூட்டத்தோடு வந்து அலுவலக ஊழியர்கள் அனைவரையும் வழக்கம்போல அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசினார். சமாதானப்படுத்த சென்ற அலுவலக ஊழியர் ஒருவரின் கைபேசியை பிடுங்கி வீசிவிட்டார். மேலும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டலும் விடுத்தார். இதுபோன்ற சூழ்நிலையை அவர் அடிக்கடி நிகழ்த்தியுள்ளார்.
ஆகவே சங்க ஊழியர்கள் தங்கள் பணிகளை தொடர்வதற்கு அச்சப்பட்டு உள்ளனர். கீழ்க்கண்ட நபர்களால் அலுவலக ஊழியர்களுக்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் என அச்சம் உள்ளது. எனவே திரு.சங்கையா மற்றும் அவர் அழைத்து அந்த கோஷ்ட்டிகளான எஸ்.ஏ.ராஜீ, எம்.உஷா, கோவைலட்சுமி, வி.அகிலா, ராணி, தேவி, ஜெயந்தி, சோலைமணி, வீரமணி, முரளி, சந்தியா, ரஜினி, தேவேந்திரன், மலர்கொடி, பொன்னுசாமி ஆகியோர்கள் மீது விசாரணை செய்து அலுவலக ஊழியர்களுக்கும் சங்கத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இதுகுறித்து 27.08.2016 மதியம் சுமார் 12.30 மணியளவில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சங்க மேலாளர் புகார் கொடுத்துள்ளார் என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்
இவ்வாறு நாசர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.