என்கிட்ட இப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்டதில்லை.. அமைச்சரிடம் புகார் அளித்த நமிதா..!

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடிகை நமிதா தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நிலையில் அந்த கோவிலின் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால் அதிருப்தி அடைந்த நமிதா அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுபோன்று என்னிடம் யாரும் கேள்வி கேட்டதில்லை என்று புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் கிருஷ்ணரின் பக்தியான நமிதா இன்று பல கோவில்களுக்கு சென்று வந்தார். அதன் பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது அங்கிருந்து அதிகாரி ஒருவர் நீங்கள் இந்துவா? என்று கேட்டபோது ஆம் என்று நமீதா கூறியுள்ளார்.

அதன் பிறகு சான்றிதழை காண்பியுங்கள், உங்கள் ஜாதி என்ன என்று அந்த அதிகாரி கேட்டதாகவும் தான் இந்து குடும்பத்திலிருந்து பிறந்தவர், திருப்பதியில் தான் திருமணம் செய்துள்ளேன், எனது மகன் பெயர் கூட கிருஷ்ணா என்று கூறியும் அந்த அதிகாரி, மேலதிகாரி சொன்னால் தான் அனுமதிப்பேன் என்று கூறியதாக நமிதா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மேலதிகாரி வந்து நமிதாவை தரிசனம் செய்ய அனுமதித்ததாகவும் இந்தியாவில் பல கோயிலுக்கு நான் சென்றுள்ளேன், எந்த ஒரு அதிகாரியும் என்னிடம் இதுபோன்ற கேள்வி கேட்டதில்லை என்றும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் நமிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.