நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட மூன்று புதிய குழுக்கள்

  • IndiaGlitz, [Friday,October 30 2015]

சமீபத்தில் முடிவடைந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுள்ள நிலையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகம் சீராக, தடங்கல் இன்றி தொடர்ந்து நடைபெற தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த நடிகர்கள் இடம்பெற்று இருப்பார்கள் என்றும், மூத்த நடிகர்களின் ஆலோசனையின்படி இந்த குழுக்கள் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் செயலாளர் விஷால் தலைமையிலான குழு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல், எஸ்.பி.ஐ சினிமாவுடன் போட்ட ஒப்பந்தம் குறித்து முடிவெடுத்தல், புதிய நிறுவனங்களுடன் போடும் ஒப்பந்தங்களை கவனித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

இதேபோல் துணைத்தலைவர்களான கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் தலைமையிலான குழு நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை சரிபார்த்தல், போலியாக உறுப்பினர்களாக இருப்பவர்களின் பெயரை நீக்குதல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற பணிகளை கவனித்து கொள்வர்.

பொருளார் கார்த்தி தலைமையிலான குழு நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்டுதல், நலிந்த நடிகர்களின் லிஸ்ட்டை தயார் செய்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்

புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவருமே கோலிவுட்டில் பிசியான நடிகர்களாக இருப்பினும் நடிகர் சங்கத்தில் ஆக்கபூர்வமாக செயல்பட முயற்சித்திருப்பதை பார்க்கும்போது இந்த சங்கம் விரைவில் உயர்ந்த நிலையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.