அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்ற நினைத்தால் என்ன ஆகும்? என்.ராம் பேட்டி

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளரும் இருந்து மறைந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது எழுந்துள்ள மிக முக்கிய கேள்வி அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் யார்? என்பதுதான். அதிமுகவை பொருத்தவரையில் பொதுச்செயலாளர் பதவி என்பது அதிகாரமிக்க முக்கிய பதவி. இந்த பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவு தீர்க்கமானதாக இருக்கும். இந்நிலையில் இந்த பதவியை கைப்பற்ற சசிகலா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா கையில் அதிமுக தலைமைப்பதவி செல்லும் பட்சத்தில் அக்கட்சி உடைந்து பலவீனமாக வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அவர்கள் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் மேலும் என்.ராம் கூறியதாவது:

சமமான அந்தஸ்து உள்ளவர்கள் வரிசையில் ஓ.பி.எஸ். முதன்மையாக இருக்கிறார் என்ற நிலையில் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலர் பதவியை அடைய நினைத்தால் எதிர்ப்பு இருக்கும். அதனால், தவறான திசையில் சென்று, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால் கட்டாயமாக அந்தக் கட்சி பலவீனமாகிவிடும். எல்லா தரப்பினரும் சசிகலா தலைமையை ஏற்க மாட்டார்கள்.

தனக்குத் தாய் இல்லாத குறையைப் போக்கும் வகையில், சசிகலா தன்னை ஒரு சகோதரியாகப் பார்த்துக் கொள்கிறார் என்று பலமுறை ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். ஆனால், அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியில் சாதாரண உறுப்பினர். அதிலிருந்து கூட இரண்டு முறை நீக்கப்பட்டு, மன்னிப்புக் கோரிய பிறகு சசிகலாவை சேர்த்துக் கொண்டார். அதுவும், தன் குடும்பத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றும் சசிகலா உறுதியளித்திருந்தார். எனவே சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அதை நம்பி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாகக்கூட முடியலாம்

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துவிட்டது என்பது ஏற்கெனவே தெரிந்துவிட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி பலனளிக்காது என்று உறுதியாகிவிட்டது. அதனால், புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை முன்னதாகவே தொடங்கிவிட்டார்கள். இதில் ஒரு வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டாலும் கூட, அந்த ஏற்பாடு தெளிவான ஏற்பாடுதான். அதே நேரத்தில், பல்வேறு முடிவுகளை எடுப்பதில், மத்திய அரசு தலையிட்டிருக்க வாய்ப்பில்லை

இவ்வாறு பிபிசிக்கு அளித்த பேட்டியில் ராம் கூறியுள்ளார்.