விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது.. அரசியல் எண்ட்ரி குறித்து பிரபல இசையமைப்பாளர்..!

  • IndiaGlitz, [Thursday,February 01 2024]

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து திரை உலக சிலர் நெகட்டிவ்வாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விஜய்யை இனி யாராலும் தடுக்க முடியாது என பாசிட்டிவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூலில் இதுகுறித்து கூறியிருப்பதாவது;

தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்தது கூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார் என்று. வழக்கமான நடிகனுக்கு என்ன தெரியும் அரசியலைப் பற்றி? விமர்சனங்கள் வலம்வரத் தொடங்கி விட்டன.

மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தூண்டல் பல்வேறு துறைகளில் இருக்கிற பலருக்கும் ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அது வந்துவிட்டது இவருக்கு. அவ்வளவுதான்! அந்த துளைப்பு வந்துவிட்ட விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது.

நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா? எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்? அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாக தெரிகிறதென்றால் அந்த உந்துதல் உண்மைதானே?
இது என் புரிதல்.

வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாக கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர் தானே!

நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்க போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே! புட்டினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே!

நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்!