'தடம்' இந்தி ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,March 11 2020]

இரட்டை வேடங்களில் அருண்விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’தடம்’. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு அருண் விஜய்க்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது என்பதும், வசூலிலும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதால் அருண் விஜய்யின் மார்க்கெட்டும் உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் உறுதி செய்யப்பட்டுள்ளது. அருண்விஜய் நடித்த இரட்டை வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பிரதீப் நடித்த போலீஸ் கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் நாயகி கேரக்டரைவிட போலீஸ் கேரக்டர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கில் கடந்த ஆண்டு நானி, ஷ்ராதா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ’ஜெர்ஸி’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரில் இதே மிருணாள் தாக்கூர் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.