எனக்கு யாருமே இல்லை: கதறி அழும் மோகன் வைத்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது முதல் நாளில் இருந்து 100வது நாள் வரை பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிடும் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் அதற்கேற்ப வகையில் எதிர்பார்ப்பை ஏற்படும் புரமோவையும் வெளியிட்டு வருகின்றனர்.

இன்று காலை சாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதாவின் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் குழுவினர் தற்போது பெண்களை கவரும் செண்டிமெண்ட்டை கையில் எடுத்துள்ளனர். மோகன் வைத்யா கதறி அழும் காட்சி சற்றுமுன் வெளியான புரமோவில் உள்ளது. எனக்கென்று யாருமே இல்லை. என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட எனக்கு மனுஷர்கள் கிடையாது. இதற்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். இதில் இருந்தாவது எனக்கு ஒரு குடும்பம் கிடைக்காதா? என்ற ஏக்கம் எனக்கு உள்ளது' என்று கண்ணீருடன் கதறியழுதவாறு மோகன் வைத்யா கூறுகிறார். இவருடைய உணர்ச்சிப்பெருக்கு வையாபுரியை ஞாபகப்படுத்துகிறது.

முதல் நாளில் சாண்டியுடன் குத்தாட்டம் போட்ட மோகன் வைத்யா, இரண்டாவது நாளே எமோஷன் ஆகியிருப்பது பிக்பாஸ் திரைக்கதையில் ஓட்டை இருப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கு மோகன் வைத்யாவின் குடும்ப பின்னணி என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கும் என்றாலும் நம்பும்படியாக திரைக்கதை அமைப்பதில் பிக்பாஸ் குழுவினர் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.