400 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி… கோரச் சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

மகாராஷ்டிர மாநிலத்தில் வேலைத்தேடி தனியாக நகரப்பகுதிக்குச் சென்ற சிறுமிக்கு 400 பேரால் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கச் சென்றபோது போலீசாரும் சிறுமியை வன்கொடுமை செய்தது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை அடுத்த அம்பேஜோகை எனும் பகுதியில் தினக்கூலியாக இருந்த ஒருவர் தனது மைனர் மகளை முறைப்படி திருமணம் செய்து கொடுத்துள்ளார். மைனராக இருந்த அந்தச் சிறுமியை அவருடைய மாமனார் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன அந்தச் சிறுமி மீண்டும் தந்தை வீட்டிற்கே திரும்பியுள்ளார். பின்னர் வேலைத்தேடி நகரத்திற்குச் சென்றுள்ளார்.

சென்ற இடத்தில் வேலை வாங்கித்தருவதாகச் சிறுயை ஏமாற்றி 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆனாலும் சிறுமி தொடர்ந்து வேலைத்தேடி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வேலைத்தேடி சென்ற இடத்தில் மட்டும் கடந்த 6 மாதமாக மைனர் சிறுமிக்கு 400 பேரால் கடும் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.

இதுகுறித்து அம்பேஜோகை பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளிக்க அந்த சிறுமி சென்றபோது காவலர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பலரது மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது மைனர் சிறுமி 20 வார கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு கருக்கலைப்பு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அணையத்தினர் ஈடுபட்டுள்ளனர்.