சென்சார் அதிகாரிகள் லஞ்சம்.. விஷால் புகாருக்கு அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

நடிகர் விஷால் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்வதற்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்தார். ரூ.3 லட்சம் ஒரு அதிகாரிக்கும், ரூ.3.5 லட்சம் இன்னொரு அதிகாரிக்கு வழங்கியதாகவும் அந்த அதிகாரியின் பெயர் மற்றும் வங்கி கணக்கையும் அவர் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் விஷாலின் வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரலான நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இதுகுறித்து எச்சரிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ளது.

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கை துறை அதிகாரிகள் லஞ்ச புகாருக்கு உள்ளானது துரதிஷ்டவசமானது என்றும் இன்றே மும்பையில் உள்ள அதிகாரிகளை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இதே போன்ற புகார் இருந்தால் உடனடியாக jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விஷாலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.