கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அமைச்சர் மற்றும் மேயர் ப்ரியா.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Sunday,February 26 2023]

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் ப்ரியா அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் புத்தக கண்காட்சி ஒன்று திறக்கப்பட உள்ளது. இந்த புத்தகக் காட்சியை திறந்து வைப்பதற்காக கமல்ஹாசனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகர மேயர் ப்ரியா நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை திறந்து வைப்பதற்காக கமல்ஹாசன் வரவேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ப்ரியா நேரில் அழைப்பிதழ் வழங்கியதாகவும் தெரிகிறது.

இந்த கண்காட்சி வரும் 28ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த கண்காட்சியை திறந்து வைக்க தான் வருவதாக கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சிறுவயது முதல் அரிய புகைப்படங்கள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.